வில்பத்து வனப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் எவரும் குடியேறவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த விவகாரம் தொடர்பில் தாம் எந்தவொரு சவாலையும் ஏற்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடகங்களில் வெளியிடப்படும் வில்பத்து வனப் பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலவிளக்கம் வழங்கும் முகமாக கொழும்பிலிருந்து சுமார் 85க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் ஊடகாவியலாளர்கள் குழுவொன்றை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று மன்னார், மறிச்சுக்கட்டி, முசலி, வில்பத்து பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதன்போது அங்கு சில ஊடகங்கள் மற்றும் பெளத்த அமைப்புக்களுக்கு எதிராக பிரதேச வாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.
மேலும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வில்பத்து வனப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளார்களா? என்ற கேள்விகளை கேட்டு வாதங்களிலும் ஈடுபட்டனர்.
அதேவேளை இளம் சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று, இனவாத கண்ணோட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வரும் சில ஊடகங்கள் மற்றும் பெளத்த அமைப்புக்களுக்கு எதிராக விரைவில் அடிப்படை மனித உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. (ஸ)
– அஸ்ரப் ஏ சமத் –
