Saturday, 23 May 2015

பிணத்தை வைத்து அரசியல் இலாபம் தேட மஹிந்த முயற்சி!

vm

புங்குடுதீவில் மிகக் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் இலாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் – என்று அமைச்சர்கள் கூட்டாகக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகிய மூவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் செயற்பாட்டை இனவாதத்தைத் தூண்டி மீண்டும் பதவியைப் பிடிப்பதற்கான வெட்கக்கேடான செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டினர்.

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது கற்கள் வீசித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளும் இதே வகையில் தான் ஆரம்பித்திருந்தனர். இதுவொரு பயங்கரமான நிலையாகும். இந்த வகையில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் சட்டம் ஒரே வகையில் செயற்படுத்தப்படவேண்டும்.

வடக்காக இருப்பினும் தெற்காக இருப்பினும் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமமானவர்கள். சட்டம் ஒழுங்கு பேணப்படவேண்டும். தற்போதுள்ள நிலைமை விரைவில் மாற்றமடையவேண்டும். தற்போது இடம்பெறும் செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்டவை என்று தெரிகின்றது என மஹியங்கனையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டிருந்தார்.

மஹிந்தவின் இந்த ஈனத்தனமான செயற்பாட்டின் மூலமாக மஹிந்த ராஜபக்‌ஷ தனது மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். தமது குடும்பத்தைச் சேர்ந்த – பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு ஏற்பட்ட பேரவலத்தையடுத்து கோபங்கொண்ட மக்கள் இயல்பாக வெளிப்படுத்திய உணர்ச்சி வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

தனது ஆதரவாளரான தங்காலைப் பிரதேசத் சபைத் தலைவர் வெளிநாட்டு யுவதியொருவரை வன்புணர்வுக்குட்படுத்தி அவரது காதலரை படுகொலைசெய்த சம்பவத்தின்போது உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டின்போது தலைமைப் பதவியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் இலங்கை விஜயத்திற்கான நிபந்தனையை பூர்த்திசெய்வதற்காகவுவே பல ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் நடவடிக்கை எடுத்திருந்தார் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தைக் கையிலெடுத்து யாழ்ப்பாணத்தில் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக அரசு துரிதமாக செயற்பட்டுள்ளதாகவும் இந்த வகையில் 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை இதனை உறுதிசெய்வதாகவும் அமைச்சர் கூறினார். மஹிந்தவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது 26, 937 துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையானது உலகின் முன்னர் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்ததாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார்.

Thanks JVP News
Loading...