பாக்.-ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானம் அருகே தற்கொலைப்படை தாக்குதல். | படம்: ராய்ட்டர்ஸ்.
லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானம் அருகே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி மற்றும் ஒருவர் குண்டுவெடிப்பில் பரிதாபமாக பலியாகினர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது மைதானத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
சரியாக 9 மணியளவில் கல்மா சவுக் என்ற இடத்திலிருந்து ரிக்ஷாவில் வந்த நபர், தான் அணிந்திருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் காயமடைந்த 4 பேர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.
குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என்றும் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அதே போல, போலீஸாரும் குண்டுவெடிப்பு நடந்ததை இரவு வரை உறுதிப்படுத்தவில்லை. ரிக்ஷாவிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இறுதியாக, குண்டுவெடிப்பு நடந்ததை பாகிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் பர்வேஸ் ரஷீத் உறுதி செய்தார். "தற்கொலைப் படைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றதில் போலீஸார் உட்பட இருவர் உயிரிழந்தனர். மைதானத்துக்குள் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருந்தனர்.
குண்டுவெடிப்பால் அங்கு மிகப் பெரிய பதற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதனை பாகிஸ்தான் ஒளிபரப்பு சங்கம் சரியாக கையாண்டது" என்றார்.
முதலில், பாகிஸ்தான் ஒளிபரப்பு சங்கம் சிலிண்டர் விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டு பின்னர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்ததை உறுதி செய்தது. இதனால் மைதானத்தில் ஏற்பட இருந்த பதற்றம் தவிர்க்கப்பட்டது.
Thanks The Hindu
