Friday, 29 May 2015

வட மாகாணத்தில் பொலிஸ் உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் கான்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் நிலவும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக பொலிஸ் உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் கான்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதியவர்களை பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க தெரிவித்தார்.
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வடமாகாணத்தில் தற்போது சேவையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை போதாமல் உள்ளது. இதனால் பொலிஸ் செயற்பாட்டை சீராக மேற்கொள்ள முடியவில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, தமிழ் தரப்பினருடைய விண்ணப்பங்கள் குறைவாக இருந்தது. வடமாகாணத்திலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைவதால் பொலிஸில் உள்ள மொழிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றார்.
‘கடந்த ஆட்சேர்ப்பின் போது, 1000 விண்ணப்பங்கள் தமிழ் பிரதேசங்களில் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 825க்கும் மேலான விண்ணப்பதாரிகள் தகைமை பெற்றிருந்தனர். குறிப்பாக வட மாகாணத்தில் தமிழ் பெண் கான்ஸ்டபிள்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்.
தற்போதுள்ள சிங்கள மொழி சார்ந்த பொலிஸார், தமிழ் பிரதேசங்களில் தமிழ் கதைத்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், தமிழை எழுத வாசிப்பதற்கு பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸார் போதுமானதாக இல்லை.
நீதிமன்ற செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வதற்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆர்வமாகவுள்ளவர்கள் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தெரிவு செய்யப்படுபவர்கள் வடமாகாணத்தில் பணியமர்த்தப்படுவார்கள்’ என அவர் மேலும் கூறினார்.
Jaffna-police1
Loading...