இரத்மலானையிலுள்ள இலங்கை விமானப்படை நூதனசாலையில் “லிஹினியா” விமானம் நேற்று பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, இது பற்றிய சர்ச்சைகள் தோன்றியிருந்தன.
விமானப்படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ள விமானம், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
லிஹினியா விமானமானது புகழ்பெற்ற பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் விமானியுமான கலாநிதி றே விஜேவர்தனவுக்கு ஒரு காலத்தில் சொந்தமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக்க மற்றும் காலஞ்சென்ற கலாநிதி றே விஜேவர்தனவின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்விமானத்தை பொதுமக்களின் பார்வைக்காக வழங்கிய றே விஜேவர்தனவின் குடும்பத்தினரை பாராட்டி, அவ்விமானத்தின் மாதிரியொன்றை அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன வழங்கினார்.
றே விஜேவர்தன என அழைக்கப்படும் பிலிப் றேவத்த விஜேவர்தன 1924 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தவர்.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்ற அவர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார்.
லிஹினியா என பெயரிடப்பட்ட விமானமானது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கிட்பொக்ஸ் 2 ரக விமானமாகும்.
அவ்விமானத்தை பாகங்களாக பிரித்து இலங்கைக்கு கொண்டு வந்த கலாநிதி றே விஜேவர்தன அவற்றை தானே சுயமாக ஒன்றிணைத்து விமானத்தை உருவாக்கினார். 2010 ஆம் ஆண்டு அவர் காலமானார்.
