
பகட்டு அரசியல்வாதிகளை நம்பி அவர்கள்தரும் 500 அல்லது 1000 ரூபாய் பணத்திற்காக தமது வாக்குகளை அளித்துவிட்டு நடுவீதியில் இறங்கியும் கடைகளை அடைத்தும் உரிமைகளுக்காக நாம் போராடி பழகியவர்கள். அதனை இம்முறையும் செய்ய நாம் முன்வந்தால் எதிர்வரும் காலங்களும் அவ்வாறே அமையும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் மயில் சின்னம் இலக்கம் 01இல் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான மென்பொருள் பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான தேர்தல் சம்பந்தமான கருத்தரங்கோன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தனது உரையில் மேலும் இது சம்பந்தமாக உரையாற்றினார்.
தனது உரையில் கடந்த காலங்களில் கிரிஸ் மனிதனின் அட்டகாசத்தை நாம் நேரடியாக சந்தித்தவர்கள்,எமது முஸ்லிம் சமுக பெண்கள் முக்காடு போடுவது முதல் கவாயா அணிவது வரைக்கும் நாம் பிரச்சினைகளை சந்தித்துள்ளோம்.சில மாதங்களுக்கு முன்னர்வரை நாம் இந்த நாட்டில் அனுபவித்த துன்பங்களின் போது பாராளுமன்றத்தில் சிக்கன் புரியாணியை சாப்பிட்டு விட்டு பாராளுமன்றத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்தவர்களே இம்முறையும் உங்கள் வாக்கை கேட்டு உங்கள் வீடுகளை தட்டுகின்றனர்.ஆனால் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் பாராளுமன்றம் வர எத்தனிக்கிறார்கள் .
இவர்களை மீண்டும் அனுப்பிவிட்டு நாம் ஓலமிட வேண்டுமா இல்லை முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தனது பிரச்சினையாக கொள்ளும் தலைவரின் கரத்தை பலப்படுத்த வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். இந்த அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 மொழியிலும் சரளமாக பேசக்கூடிய உயிரை துச்சமாக மதித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க கூடிய சிறந்த ஒருவரை பாராளுமன்றம் அனுப்புங்கள்.
இந்த மண்ணின் அபிவிருத்தியை அன்வர் இஸ்மாயிலுக்கு பிறகு யாரும் முன்னெடுக்க வில்லை. அதனை நான் முன்னெடுத்து செல்லவும் எனது சமுகத்திற்காக குரல் கொடுக்கவும் ஆசைப்படுகிறேன். எனது மாற்றத்தை நோக்கிய மக்கள் பணியை செயற்படுத்த என்னை வெற்றிபெற செய்யுங்கள் என அவரது உரையில் தெரிவித்தார்.
நூர்
