சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஃபேஸ்புக் முன்னணியில் இருக்கிறது.
மாதந்தோறும் 150 கோடி பயனாளிகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிட வலைப்பின்னல் சேவையாக ஃபேஸ்புக் திகழ்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஃபேஸ்புக், அதன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 100 கோடி பேர் அந்த சேவையை பயன்படுத்தியுள்ள மைல்கல்லை எட்டியுள்ளதாக, நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தந்து ஃபேஸ்புக் பதிவு மூலம் பகிர்ந்து கொண்டுள்ள மார்க் , கடந்த திங்கள் அன்று ஒரே நாளில் 100 கோடி பேர், அதாவது உலகில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.
முதல் முறையாக இந்த மைல்கல்லை தொட்டிருப்பதாகவும், முழு உலகையும் இணைக்கும் முயற்சியின் துவக்கம் இது என்றும் மார்க் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கின் சாதனை மற்றும் நோக்கம் பற்றி மேலும் பலவிதங்களில் பெருமையுடன் மார்க் குறிப்பிட்டுள்ள அந்த பதிவுக்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்திருப்பதுடன், பலரும் ஆர்வத்துடன் பதில் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் ஃபேஸ்புக், கடந்த 2012 ம் ஆண்டுதான் 100 கோடி பயனாளிகள் எனும் எண்ணிக்கையை எட்டியது.
தற்போது ஒரு நாளில் அதிக பயனாளிகள் எனும் சிகரத்தை தொட்டிருந்தாலும், ஃபேஸ்புக்கால் இதே அளவு வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? எனும் கேள்வியை உண்டாக்கியுள்ளது.
வளர்ச்சியை குறி வைத்து ஃபேஸ்புக் இணைய சேவையை பரவலாக்கும் நோக்கில் மேற்கொண்டுள்ள இண்டெர்நெட்.ஆர்க் திட்டம், இணைய சமநிலைக்கு எதிராக அமைந்துள்ளது எனும் விமர்சனம் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
