பிலிப்பைன்ஸில் இருக்கும் சீன தூதரகத்தில் பணிபுரிந்த இரண்டு சீன தூதரக அதிகாரிகளைக் கொன்றதாக குற்றம்சாட்டப்படும் சீன தூதரக அதிகாரியும் அவரது கணவரும் விமானம் மூலம் சீனாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சீனாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கும் சீன தூதரக அதிகாரியின் கணவர் தூதரக அதிகாரிகள் இருவரையும் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான சீன தூதரையும் அவர் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
செபு தீவில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைத் தொடந்து இந்தக் கொலைகள் நடந்ததாக பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சீன தூதரக அதிகாரிகளுக்கு தூதரகங்களுக்கும் தூதரக ஊழியர்களுக்கும் உள்ளூர் சட்டங்களிலிருந்து அளிக்கப்படும் ராஜாங்கத்துறைப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று சீனா கோரியிருந்தது.
அதேசமயம், இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்படும் இரண்டு இராஜாங்க அதிகாரிகளையும் சீனாவுக்குத் திரும்ப அழைத்திருக்கும் சீன அரசு அவர்கள் மீதான வழக்கை அவர்கள் இருவரும் சீனாவில் எதிர்கொள்ளச் செய்திருக்கிறது.
