இலங்கையில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவந்த அடைமழை சிறிது குறைந்துள்ளது.
இதையடுத்து பல இடங்களில் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளன.
நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் பலர் தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது.
இந்த மழையின் காரணமாக வட மாகாணத்தில் மட்டும் சுமார் ஒரு 120,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் கூறுகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன.
ஆயிரக் கணக்கான வீடுகள் முற்றாகவோ அல்லது பகுதி அளவிலோ சேதமடைந்துள்ளன என்று அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் திருமுறிகண்டி கிராமத்தினுள் வெள்ளம் புகுந்ததையடுத்து, வெளியில் வரமுடியாமல் சிக்கியிருந்த மக்களை இராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்டனர்.
பூனகரி வழியாக யாழ்ப்பாணம் செல்கின்ற பிரதான வீதியில் மண்டைக்கல்லாறு என்ற இடத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சாலை 5 அடி அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அங்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டனர் என கிளிநொச்சி அரசாங்க அதிபர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
