எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய அரசியல் கட்சியொன்று ஸ்தாபிக்கப்படும் அதேநேரம் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்படுவதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவரும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினருமாகிய விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய அரசியல் கட்சியொன்று ஸ்தாபிக்கப்படுவதற்கான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில மாதங்களில் விடுக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அரசாங்கம் இனவாத மோதல் ஒன்றை உருவாக்க செயற்பாடுகளை மும்முரமாக மேற்கொள்கின்றது. அரசாங்கத்தின் மீது நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் போது, எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த, ஒவ்வொரு துருப்புச் சீட்டுக்களை எடுத்து அவற்றில் பலன் கிடைக்காத நிலையில், கறுப்பு ஜூலை போன்ற இனவாத மோதலை ஏற்படுத்த தயாராகி வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அன்று கறுப்பு ஜூலை கலவரத்தை ஏற்படுத்தி தமிழ், சிங்கள மக்கள் இடையே பிளவை ஏற்படுத்தியது. அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சிகள் மீது சுமத்தி, அந்த கட்சிகளை தடைசெய்தது. இவ்வாறான அடக்குமுறை மூலம் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தமக்கு எதிராக எழும் மக்கள் எதிர்ப்பை இரத்தத்தின் மூலம் அடக்கியது. இவ்வாறான செயற்பாடுகளையே இன்றும் முன்னெடுக்க முயற்சிக்கின்றது.
எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் இந்த அரசாங்கத்திற்கு அடக்கு முறை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக போராடி வருவதோடு வெகுவிரைவில் அரசாங்கத்திற்கு சவால் விடும் அளவு புதிய கட்சியொன்றை உருவாக்குவோம் இதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
