இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சி பெற்று தீவிரவாதம் தலைதூக்கும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நீடித்த உள்நாட்டுப் போர் 2009-ல் முடிவுக்கு வந்தது. மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது 2009 மே மாதத்தில் இறுதி கட்டப் போர் நடைபெற்றது. 

இதில் வெற்றி பெற்றதால் 2010 தேர்தலில் அவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடந்த ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த நாட்டில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களம் இறங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காக அவர் இப்போதே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

புத்த கோயில்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு நடத்தி வரும் அவர், பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

இந்நிலையில் அனுராதபுரத்தில்நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்ச்சியில் ராஜபக்ச பேசியதாவது:

இலங்கையில் இப்போது தீவிரவாதிகள் (விடுதலைப் புலிகள்) இல்லை என்று பெருமையாகக் கூறி வருகிறோம். ஆனால் தீவிரவாதிகள் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என்று சந்தேகிக்கிறேன். அப்போது நாம் மீண்டும் தீவிரவாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. நாட்டில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர் பகுதிகளில் ராணுவத்தின் பிடி தளர்த்தப்பட்டு வருவதாக ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.