யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்க தனியான குழுவொன்றை அமைக்குமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து வெள்ளிக்கிழமை (19) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டன.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு சிறந்தவொரு பேரவை நியமித்ததன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முக்கியமான பணியை நிறைவு செய்துள்ளது.
புதிதாக பதவியேற்ற பேரவையிடம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நியமன முறைகேடு சம்பந்தமாகவும், நிதி முறைகேடுகள் சம்பந்தமாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு அரசியல் தலையீடுகள் மட்டும் காரணமில்லை. இதற்கு உடந்தையாக துணைவேந்தரும், பதிவாளரும், சில பீடாதிபதிகளும், சில நிர்வாக அதிகாரிகளும் செயற்பட்டுள்ளனர்.
இதனால் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்படும் விசாரணைக்குழுவில் பல்கலைக்கழக பேரவையின் உள்வாரி உறுப்பினர்களின் பங்கில்லாமல் செய்யப்படவேண்டும்.
நியமன மற்றும் நிதி முறைகேடுகளை விசாரிப்பதற்கு முழுவதும் வெளிவாரி பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தனியான விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக’ அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.