Friday, 5 June 2015

கால்களால் ருசியறியும் நடனம்

Anar Issath Rehana
    Anar Issath Rehana
                                                              
அந்திப்பூச்சியின் மந்திரம் 
பலிக்கத் தொடங்குகையில்

கோடை நடனம் செக்கச் செவேலென
கரைந்துருகுகின்றது

உருவம் 
பொன்னொளி உருக்கென வியாபிக்க
வெள்ளை ஆடை அகன்று குடைவிரிய
உயிர் எனும் வெள்ளிப்பூச்சி
ஜோதியை மொய்க்கிறது

உருக்கொண்டு முற்றி வெடிக்கின்ற
நிறச் சுளைகளின் மீது
கால்களால் ருசியறியும் நடனம் சுழல்கிறது

ஆவி கவ்விடும் பார்வையில்
நிசப்தவெளி விரிய
மஞ்சள் புல்வெளியாளின்
சிறகுகள் படபடக்கின்றன

களிநடனமிடும்
மேகங்களின் நறுமணம் சொட்டுகின்ற
தெய்வீகப் பனிமுத்துக்கள் உறிஞ்சி
மஞ்சள் சிறகன் உணர்வின் ஆழத்திற்கு
நித்தியத்தின் கிருபையை கொண்டு செல்கிறான்




Loading...