ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்ததையடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் நரம்பியல் பாதிப்பு ஒன்றை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கிறார்.
அதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதியில் உணர்விழந்துபோன அந்த பெண் பிறகு மயங்கி விழுந்துவிட்டார். அவரது கால்களிலின் கீழ்ப்பகுதி பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் வெட்டி எடுக்க வேணிய சூழல் ஏற்பட்டது. பிறகு அவருக்கு நான்கு நாட்களுக்கு நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ், அவரது கால்களுக்கான இரத்த ஓட்டத்தை தடுத்து பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், அத்துடன் அவரது கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம் ஏற்படுத்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ஜர்னல் ஆப் நியூராலஜி, நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த மருத்துவர்களின் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
