உலக அமைதிச் சுட்டியில் இலங்கைகுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டியில், சிறிலங்கா 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட, பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகம் ஆண்டுதோறும் உலக அமைதிச் சுட்டி என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.
162 நாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை 114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இலங்கை 105ஆவது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்தது.
அதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டில், இலங்கை 109ஆவது இடத்தில் இருந்தது.
இம்முறை இலங்கை கடந்த ஆண்டை விட, ஒன்பது இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தெற்காசியாவில் பூட்டான் 18ஆவது இடத்திலும், நேபாளம், 62அவது இடத்திலும், பங்களாதேஸ் 84ஆவது இடத்திலும், இந்தியா 143 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 154ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 160ஆவது இடத்திலும் உள்ளன.
மிகவும் அமைதியான நாடுகளாக ஐஸ்லாந்து, டென்மார்க், ஒஸ்ரியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, அமெரிக்கா 94ஆவது இடத்திலும், சீனா 124ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
