இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.
இதற்கிடையே, இந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சிவில் சமூகத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் நேற்று புதன்கிழமை இரவு மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து வலியுறுத்தினர்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் போடிட்டியிட யார் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது தமது கட்டுப்பாட்டில் இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக அந்த சிவில் சமூக தேர்தல் கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷில் பிரேமஜெயந்த மற்றும் பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிர்வாகக்குழுவே அந்த முடிவுகளை எடுப்பதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாகவும், அந்த குழுவின் சார்பில் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.