Thursday, 30 July 2015

கலாமின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது: வழிநெடுக லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று ராமேஸ்வரத்தில் பேய்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தாெழுகைக்கு பின்னர் கலாமின் உடல் இறுதி ஊர்வலமாக ராணுவ வாகனத்தில் புறப்பட்டு செல்கிறது. வழிநெடுக லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பள்ளிவாசல் வந்தது கலாம் உடல்...
இரவு முழுவதும் கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. ராணுவ வீரர்களால், தொழுகை பள்ளிவாசலுக்கு எடுத்துச்செல்லப்பட்ட கலாமின் உடலை பள்ளிவாசல் வாயிலில் ஜமாத்தார்கள் பெற்றுக்கொண்டனர்.
கலாமின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது...
அங்கு தொழுகை முடிந்தபின் மீண்டும் ராணுவ வீரர்களிடம் கலாமின் உடல் ஒப்படைக்கப்பட்டடு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தின் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடக்கத்தளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வாகனம், ராம தீர்த்தம் தெற்கு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக அடக்கத்தளத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
மோடி, ராகுல் மதுரை வருகை...
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர்.

பேய்கரும்பு நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அன்டை மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். கலாமின் உடலை கடைசி முறையாக பார்ப்பதற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் சோகத்துடனும், கண்ணீருடனும் குவிந்துள்ளனர்.

கோடிக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த திங்கட்கிழமை மாலை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தபோது மரணம் அடைந்தார். அவரது உடல் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்கிழமை காலை அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அப்துல் கலாமின் உடல் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடத்த அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, அப்துல் கலாமின் உடல் நேற்று காலை டெல்லியில் இருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ராணுவ விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்பின், அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வாகனத்தில் உடல் ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மண்டபம் முதல் ராமேசுவரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அப்துல் கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலாமின் உடல் வைக்கப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த 3 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சோகத்துடனும், கண்ணீருடனும் காத்திருந்தனர்.
உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு...
பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இரவில் அப்துல் கலாமின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கலாமின் வீட்டினுள் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அப்பகுதியை இஸ்லாமியர்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

- இரா.மோகன்
Loading...