இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்பதே கட்சியின் விருப்பம் என அதன் தலைமைச் செயலர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
நாளை-வெள்ளிக்கிழமை கொழும்பில் பல்கட்சித் தலைவர்களை தான் சந்திக்கவுள்ளதாகவும், அதன் பிறகே கட்சியின் முடிவு வெளியாகும் எனவும் அவர் தெவித்தார்.
கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை தான் சந்திக்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் கடந்தகால அனுபவங்கள் மற்றும் தமது ஆதரவாளர்களின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தமது கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என ஈபிடிபியின் பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை பல்கட்சித் தலைவர்கள் கடந்தகால உறவுகளின் அடிப்படையில் தன்னுடன் கலந்துரையாட கொழும்பு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் ஈபிடிபி கட்சியின் தலைமைச் செயலர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
