Sunday, 7 February 2016

இலங்கை சிறுபான்மை கட்சியினர் சுஷ்மா ஸ்வராஜுடன் சந்திப்பு

இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இலங்கையிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
Image copyrightmanoganesan
Image captionஇந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை அவருடன் பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளன.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்த அவர்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர்.
புதிய அரசியல் அமைப்பு, நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கே தொடரும் இராணுவப் பிரசன்னம் ஆகியவு குறித்தும் அவருடன் தாங்கள் விவாதித்தாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்குமென தமக்கு சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார் எனவும் அவர் கூறுகிறார்.
சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்திர தீர்வு குறித்து வலியுறுத்தியாதாக அதன் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
புதிய அரசில் சிறுபான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படியுள்ளது என்பது குறித்தும் இந்திய அமைச்சருக்கு விளக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்படும்போது, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் எனத் தாங்கள் கூறியதாக அதன் தலைவரும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையகப் பகுதியில் 4000 வீடுகளை கட்டும் இந்திய அரசின் பணியை மேலும் விரிவுபடுத்தி இன்னும் 20,000 வீடுகளைக் கட்டித்தர வேண்டும், பாடசாலைகளை மேம்படுத்த உதவ வேண்டும் எனும் கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையில் நீண்டகாலாம புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் கோரியுள்ளார்.
நாட்டில் எந்த இனமும் பாதிக்கப்படாத வகையில், குறிப்பாக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று அவர் சுஷ்மா ஸ்வாரஜை சந்தித்தபோது தெரிவித்துள்ளார் என அவரது அமைச்சின் ஊடக அறிக்கை கூறுகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் அவரை சந்தித்து பேசியுள்ளனர்.
Loading...