எட்டாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது. இதன் பின்னர் எத்தனை வேட்புமனுக்கள் தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்ற காரணத்தினால் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்படுவதான அறிவிப்பும் வெளியாகிவிடும்.
இதில் எந்ததெந்த அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்களினது வேட்புமனுக்கள் என்பதையும் நாம் இன்றே அறிந்துகொள்ளமுடியும். கொழும்பில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் இலங்கை மக்கள் மாத்திரமின்றி உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் இலங்கை மாத்திரமின்றி வெளிநாடுகள் பலவும் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்திவருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லுக்குப் பின்னர் நல்லாட்சிக்கான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் என்பதனால் மாத்திரமின்றி இன்றுடன் முடிவடையும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஊழல், மோசடி, சர்வாதிகாரம், வெள்ளை வேன் மூலமான ஆட்கடத்தல் போன்ற விரும்பத்தகாதவை மாத்திரமின்றி கருத்துச் சுதந்திரத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் நிர்வாகத்தில் இடமில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் சகல இனமக்களுக்குமான நல்லாட்சி நாட்டில் மீண்டும் மலர வேண்டும். அதற்காக அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி பல சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களமிறக்கி வெற்றிபெறச் செய்தனர். ஆனால் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தற்போதைய ஜனாதிபதியே நல்லாட்சியை குழி தோண்டி புதைத்து விடுவாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புறந்தள்ளி நல்லாட்சிக்காக முன்வந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஆனால் அவரே நல்லாட்சிக்கு எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் ஜனநாயக நடை முறையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் முன்னணியின் தலைமைப் பொறுப்பையும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இவரே குற்றச் சாட்டுக்கள் பல தெரிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு இதே கட்சியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு வழங்கி விட்டார் என்று பலரும் பாரிய குற்றத்தை சுமத்துகின்றனர்.
வேட்பு மனுக்கான இறுதி நாள் இன்று. ஆனாலும் நேற்று வரையில் யார் எந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எந்த மாவட்டத்தில் போட்டியிருகின்றார்? அவருக்கான வேட்பு மனு உறுதியாகி விட்டதா என்ற விடயங்கள் உத்தியோக பூர்வமாக முழுமையான தகவல் அறியப்பட வில்லை.
எவராலும் அழிக்க முடியாத தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதான பெருமையைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியினால் கூட தற்போதைய அரசியலை புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அந்த அளவுக்கு முக்கியத்து மிக்கவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிவருகிறார். இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்ட விடயத்தில் அவர் காத்துவரும் மௌனமே. உண்மையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கினாரா?அல்லது முன்னாள் ஜனாதிபதி தனக்கு ஆதரவாக இருக்கும் சிலரைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வேட்பு மனுவை பெற்றாரா?
இதனால் தான் ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ்போட்டியிட முன்வந்தனரா? அல்லது அரசியலில் பல தோல்விகளை சந்தித்த போதிலும் தனது அரசியல் சாணக்கியத்தை நிலை நிறுத்தி வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா? இவை அனைத்துக்கும் விடை காண வேண்டுமாயின் ஜனாதிபதியின் மௌனம் கலையப்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேம்ஜயந்தவே முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்பட்டதாக அறிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற வேட்பு மனு தொடர்பான கூட்டத்திற்குப் பின்னரே முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுசில் பிரேம்ஜயந்த இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் நடந்தது என்ன?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் தான் தற்போதைய ஜனாதிபதி. தன்னால் அந்தக் கட்சி பிளவுபட்டது என்ற பெயர் தனக்கு ஏற்படக் கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்திருக்கலாம். இதனாலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்படுவதில் ஜனாதிபதி தலையீடு செய்யாதிருக்கலாம் என்ற நிலைப்பாடும் உண்டு. அதே வேளை, நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக தன்னோடு ஒத்துழைத்தவர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டாகும்.
முன்னாள் ஜனாதிபதிக்கான வேட்பு மனுவை வழங்குவதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேம்ஜயந்தவும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.
தேர்தல் அறிவிப்பு இடம் பெற்றுள்ள வேளையில் இவர்கள் இருவரையும் இவர்களது கட்சிப் பதவியிலிருந்து நீக்கினால் கட்சியின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? புதியவர்களை நியமித்து தேர்தல் வேட்பு மனு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பிலான சட்டப் பிரச்சினைகளிலும் ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுசில் பிரேம்ஜயந்தவும் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றால் நீதிமன்றம் இது தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவே மேற்கொள்வார் என்று நீதிமன்றம் அறிவிக்கும்.
அதற்கான சட்ட விதிகளே இருப்பதாக சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இதனை உறுதி செய்யும் வகையில் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் ட்சியின் பொதுச் செயலாளர் கடந்த வாரம் கருத்து தெரிவித்தார். தான் வகிக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டால் நீங்கள் உங்கள் பதவியை அவருக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ‘‘ஆம்” என்று அனுர பிரியதர்ஷன பதில் அளித்தார்.
திறைமறைவு நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிக்கான வேட்பு மனு விடயத்தில் மௌனமாக இருந்து வந்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மௌனம் சாதித்த போதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்பட்ட தகவல் வெளியான பின்னரும்கூட கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பெறப்பட்ட வெற்றியை திசை திருப்ப இடமளிக்கப்போவதில்லை என பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். இவற்றுக்கு மேலாக கடந்த வெள்ளிக்கிழமை கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ற் கல்லூரியின் 125 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,
‘‘தானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சரவையும் இணைந்து கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போவதாக வலியுறுத்தினார். அப்படியானால் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என்பதை ஜனாதிபதி உறுதி செய்துள்ளாரா? இதன் பின்னணி என்ன?
மக்களின் அமோக செல்வாக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே உண்டு. அதனால் அவருக்கு பொதுத் தேர்தல் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலையை கருத்திற்கொண்டே வேட்பு மனு வழங்கப்பட்டதான நிலைப்பாடு இருந்த நிலையில்தான் ஜனாதிபதி இவ்வாறான கூற்றை கூறினார் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
நல்லாட்சிக்காக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஒருவர் என்பதை பலரும் அறிவர். ஆனால் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டதை அவர் விரும்பவில்லை. இந்த நிலையிலேயே அவர் ஜனாதிபதி மீது ஆத்திரமடைந்து லண்டன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவும் அரசியல் சாணக்கிய நகர்வின் ஓர் கட்டம் என சிலர் விபரிக்கின்றனர். அவர் அங்கு சென்ற சில தினங்களுக்குள் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் போட்டியிடப் போவதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் அறிவிப்பு இடம்பெற்றமையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மௌனத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு இன்று இடம் பெறா விட்டாலும் சில தினங்களில் இடம் பெறலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் ஏறப் போகின்றாரா? என்பதை நிச்சயம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்யப்போகின்றார் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அது இன்று தான் உறுதி செய்யப்படும். தனது வேட்பு மனு தொடர்பில் சந்தேகத்திலிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிடப் போவதை கடந்த வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. சில வேளையில் தனக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியில் வேட்பு மனுக்கான சந்தர்ப்பம் கிடைக்காத பட்சத்தில் வேறு கட்சியூடாக வேட்பு மனுக்கு ஏற்பாடு செய்துள்ளாரா? அல்லது இரண்டு வேட்பு மனுக்களும் இன்று தாக்கல் செய்யப்பட்டால் இவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
இப்படியான நிலையில் அது தொடர்பில் முடிவை தேர்தல்கள் ஆணையாளரிலும் பார்க்க நீதிமன்றமே மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்படியான விடயம் தொடர்பில் இதற்கு முன்னர் பல வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் சட்ட விடயங்களில் கவனம் செலுத்தியுள்ள இவரும் தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்டத்துறையினருடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதற்கு மத்தியில் லண்டன் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதியின் அறிவிப்புக்குப் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிடயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்பட்ட விடயத்திற்கு முக்கிய இடமளிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மீண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வரலாற்றுச் சம்பவம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இடம்பெறவுள்ளது. சட்ட ரீதியிலான தடை இதற்கு இல்லாதிருந்த போதிலும் அவருக்கு எதிரான சக்திகள் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லக்கூடும். இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது எப்படியிருந்த போதிலும் வேட்பு மனுத்தாக்கலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு பொதுத்தேர்தலில் போட்டியிட யார், யார் தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை வேட்பு மனு அடிப்படையில் உறுதி செய்துவிடுவார்.
இதேவேளை 29 முறை தேர்தல்களில் தோற்று, மீண்டும் அரசியலில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சாணக்கியத்தையும் இங்கு குறிப்பிடுவது மிக பொருத்தமானதாகும்.
சிங்கள மொழியில் இப்படியொரு பேச்சு வழக்கு உண்டு. அதாவது பன்றியின் முதுகில் வைத்து பன்றி இறைச்சியை வெட்டுவது போன்றே இலங்கை அரசியலில் எப்பொழுதும் வீழ்த்த முடியாது என்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடித்ததை பலரும் இன்று சுட்டிக்காட்டுகின்றனர். இதேபோன்றே தனது அரசியல் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து முன்னெடுத்து தக்கவைப்பதில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் சாணக்கியத்தை முன்னெடுக்கத் தவறமாட்டார்.
(சூரிய கலா)
