Friday, 21 August 2015

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்க
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன் இந்த பதவியேற்பு நடைபெற்றது. மத நிகழ்வுகளின் பின்னர் சத்தியப் பிரமாணம் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபிர் ஹஷிம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரணிலின் பதவியேற்பில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
ரணிலின் பதவியேற்பில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நான்காவது முறையாக இன்று பதவியேற்றிருக்கிறார். 1993 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக கடமையாற்றிய ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதம் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கத்திலும் பிரதமராக கடமையாற்றி வந்தார்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...