Monday, 7 September 2015

காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த புதிய அறிக்கை கையளிப்பு!











காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக் குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, சிஎச்ஆர்டி எனப்படும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள சந்தர்ப்பத்தில், அடுத்து நடத்தப்பட வேண்டியது உள்நாட்டு விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர், இராணுவத்தினர், துணை ஆயுதக்குழுக்கள் போன்றவர்களாலும் வெள்ளை வேன்களில் வந்தவர்களாலும் பகிரங்கமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள், யுத்தத்தின் இறுதி நாட்களில் அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போயிருப்பவர்கள், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் என்று மூன்று பிரிவுகளாக இந்த அறிக்கை தொகுக்கப்பட்டிருப்பதாக சிஎச்ஆர்டி அமைப்பின் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் பிபிசியிடம் தெரிவித்தார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாணைகள் நடத்திய ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், சீரற்ற நடைமுறைகள் என்பன குறித்தும் மக்கள் இந்த விசாரணைகளில் நம்பிக்கை இழந்திருப்பதற்கான காரணங்கள் பற்றியும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில், காணாமல்போனவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் பற்றியும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை, பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளை உள்வாங்கி சரியான முடிவுகளை மேற்கொள்வதற்குப் பேருதவியாக அமையும் என்றும் ரட்னவேல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Loading...