பாடசாலைகளுக்குள் அரசியல் செய்யும் கலாசாரம் முறியடிக்கப்பட வேண்டும் : கிழக்கு முதலமைச்சர்
பாடசாலைகளுக்குள் அரசியல் செய்யும் கலாசாரம் முறியடிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழிநுட்பட ஆய்வு கூடக்கட்டிடத்தினை திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதிபர் ஏ.எம்.அல்லாபிச்சை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய முதலமைச்சர் மாகாண அதிகாரத்தினை விட்டுக் கொடுக்கின்ற முதலமைச்சராக ஒரு போதும் நான் இருக்க முடியாது. அது எந்தவொரு அதிகாரமாக இருந்தாலும் அதை விட்டுக் கொடுக்க முடியாது.
அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை நாங்கள் எந்தவொரு அதிகார துஷ்பிரயோகமும் அரசியலுக்காக எனது முதலமைச்சர் காலத்தில் நடைபெறாது என்ற உத்தரவாத்தினை முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து கூறி வருகின்றேன்.
நியாயமான காரணமில்லாமல் எந்தவொரு ஆசிரியரையும் இலகுவாக யாரும் இடமாற்ற முடியாது.இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
நானுட்பட எந்தவொரு அரசியல் வாதியாக இருந்தாலும் பாடசாலைக்குள் அரசியலைக் கொண்டு வரக் கூடாது.அதற்கு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் இடம் கொடுக்க கூடாது. இதற்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
பாடசாலைக்குள் அரசியல் செய்யும் கலாசாரம் முறியடிக்கப்படவேண்டும். அரசியல்வாதிகள் ஒரு காடைத்தனமான குழுவை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.காடயர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்யக் கூடாது. என்னுடைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறான அரசியல் கலாசாரம் ஒழிக்கப்படும்.
அரசியல் வாதிகள் மக்களுக்கு சேவை செய்தால் எந்தவொரு அடிதடி குழுவும் அரசியல் வாதிகளுக்கு தேவையில்லை. மக்கள் வாக்களிப்பார்கள். மக்கள் தெளிவு செய்வார்கள்.மக்களுக்கு நீங்கள் வேலை செய்யாமல் மக்களையும் நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் தலைமைகள் மாற்றப்படல் வேண்டும்.
ஓட்டமாவடியில் புதன்கிழமையன்று பிரதியைமச்சர் அமிர்அலி பல குழுக்களை நியமித்து நாங்கள் பாடசாலை கட்டிடங்களை திறக்கப்போகின்றோம் என்றால் கடைகளை மூடுங்கள் அல்லது மாணவர்கள் பாடசாலைக்கு போகக் கூடாது. இல்லாவிட்டால் நான் வந்து திறக்கின்றேன். என்றெல்லாம் கூறியுள்ளார். இது நாகரீகமான அரசியலா என நான் கேட்கின்றேன்.ஒருவாரத்திற்கு முன்னரே அழைப்பிதழ் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
முதலமைச்சரும் மாகாண கல்விப் பணிப்பாளரும் வலயக்கல்விப் பணிப்பாளரும் போய் பாடசாலையை தூக்கி கொண்டா போகப்போகின்றார்கள்.
முழு அதிகாரமும் மாகாண சபைக்கு இருக்கின்றது. எந்தவொரு அரசியல் வாதிக்கும் வழங்கப்படும் நிதி அவர்களுடைய சொந்த நிதியல்ல மக்களுடைய நிதி என்பதை புரிந்து கொள்ளும் அரசியல் தலைமைகளாக மாற வேண்டும்.
நிதிவழங்கியவர்கள் தான் கட்டிடத்தினை திறக்க வேண்டுமென்றிருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷசதான் இந்தக் கட்டிடத்தை திறக்க வேண்டும்.
நாகரீகமான அரசியல் கலசாரத்தினை செய்ய வேண்டும். மிகவும் மன வேதனைப்பட வேண்டிய விடயம் இந்தப்பாடசாலையில் இரவோடு இரவாக வந்து திறமையைக் காட்டியது போன்று பெரிய வேலையை செய்த மாதிரி மாணவர்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஆய்வு கூடத்திற்கு கழிவு எண்ணெய் வீச, கதவை உடைப்பது என்பது என்ன அரசியல் கலாசாரம் என நான் கேட்கின்றேன்.
இ்ந்தக் கலாசாரத்தினையா நாம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது. இது பொிய சாதனையான விடயமா எனக் கேட்கின்றேன்.
நான் பெருமைப்படுகின்றேன் இந்தப்பாடசாலைக் கட்டிடத்தை நான் வந்து திறப்பதற்கு ஏற்ற மாதிரி இதை மாற்றியிருந்தீர்கள் அதற்காக நான் நன்றி கூறுகின்றேன். யாருக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் பயப்பட வேண்டிய தேவையில்வை. நான் முதலச்சைராக இருக்கும் வரைக்கும் இறைவனைத்தவிர யாருக்கும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
