Sunday, 15 November 2015

உண்ணாவிரதம் இருந்த 35 கைதிகள் மயக்கம்! - எட்டாவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்













பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, தமிழ் அரசியல் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை 35 கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த 7 ஆம் திகதி வரை நிறைவேற்றப்படாததையடுத்து மறுநாள் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 

இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் ஆரம்பித்தனர். ஜனாதிபதி தம்மை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் கைதிகள் இருக்கின்றனர்.

நல்லாட்சியில் எமது உறவுகளுடன் வாழத்தான் நாம் ஆசைப்படுகின்றோம். ஆனால், சாவுதான் எமக்குத் தீர்வு என்றால் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். எம்மை ஜனாதிபதி விடுவிக்காவிடின் சாகும்வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவுகள் ஊடாகத் தெரிவித்துள்ளனர்.


Loading...