ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலக்கு இலங்கையின் பக்கமும் திரும்பலாம் : ஞானசார தேரர் எச்சரிக்கை
தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்கள் விரைவில்
இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன், பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் குருணாகல் பரகாதெனிய பிரதேசம், மாவனெல்லை மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மதரசா என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மதத் தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன. இது எமது நாட்டிற்கு எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள் உருவாகும் சாத்தியம் உள்ளன.
இந்நிலையில், தற்காலத்தில் ஐரோப்பியநாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் ஐ.எஸ் இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். இவர்கள் தாம் தீவிரவாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்றோருக்கும் அறிவிப்பதில்லை. இவர்கள் அல்லாஹ் என்று இறைவனின் பெயரை கூறிவிட்டு எந்த தவறையும் துணிந்து செய்கின்றனர். இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் பொறுப்புணர்வு உள்ளவர்கள் அமைதி களைய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
