மாணவர் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல்
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என்று, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார்
நாடாளுமன்றதில் நேற்று செவ்வாய்க் கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எம்.பி. 23/2ம் இலக்க நிலையியல் கட்டளையின் கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த போதே உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறி மாணவர்களுடன் தொடர்புடைய 1990/46ஆம் இலக்க சுற்றறிக்கையை கடந்த அரசுதான் செல்லுபடியற்றதாக்கியது. அதனால்தான் அந்த மாணவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண்போம். அந்த சுற்றறிக்கையை நாம் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையாக இந்த மாணவர்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எமது இந்தத் தீர்மானத்தை அறிந்து கொண்டுதான் மாணவர்கள் வீதிக்கு இறங்கினர். நாம் இதை செயற்படுத்த தீர்மானித்துள்ள போது ஏன் பேரணி சென்றீர்கள்? இதன் பின்னணியில் அரசியல் உள்ளது.
இந்த மாணவர்கள் சிவில் சட்டத்தை மீறாமல் பேச்சு நடத்த வருவார்களாயின், நானும் பிரதமரும் அவர்களுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும் தெரிவித்தார்
