நல்லாட்சியின் முக்கிய தீர்மானம் நாளை : பிரதமர்
மக்களின் நலனை நோக்கிய நல்லாட்சியை தொடர்வதா? அல்லது மக்களை ஓரங்கட்டும் பழைய நிலைக்கு திருப்புவதா? என்ற முடிவு நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரயைாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் பின்னடைந்த இலங்கையை நல்லாட்சியின் 365 நாட்களில் முன்னிலைக்கு கொண்டுவர முடிந்ததாகவும் இதற்கு வடக்கு தொடக்கம் தெற்கு வரை தமிழ், முஸ்லிம், சிங்களம், மற்றும் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒத்தழைப்பு வழங்கினர் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியமைக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த கட்டமாக புதிய அரசியலமைப்பு நாளை முன்மொழியப்படவுள்ளது. மக்கள் நினைக்கும் பழைய நிலைக்கு இந்த நாட்டை நாம் கொண்டு செல்ல மாட்டோம் எனவும் எமது போராட்டம் தொடரும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
