பனாமா மொசெக் பொன்சேகா நிறுவனம் முற்றுகை
சர்ச்சைக்குரிய பனாமா மொசெக் பொன்சேகா (Mossack Fonseca) நிறுவனத்தை அந்நாட்டு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் கறுப்புப் பணம் மற்றும் சொத்து பதுக்கல் குறித்த, விபரங்கள் வெளியானதை அடுத்து, குறித்த விபரங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு பனாமா நாட்டின் பனாமா நகரிலுள்ள குறித்த நிறுவனத்தின் தலைமையகமே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனாமா ஆவணங்கள் (பனாமா பேப்பர்ஸ்) எனத் தெரிவிக்கப்படும் குறித்த ஆவணங்களில், செல்வந்தர்கள் அரசாங்க வரியைத் தவிர்க்கும் பொருட்டு போலியான நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்த கறுப்புப் பணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 11 மில்லியன் ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொசெக் பொன்சேகா நிறுவனம் குறித்த ஆவணங்கள் தொடர்பான பிழையான தகவல்களை மறுத்துள்ளது.
