
அனார் இஸ்ஸத் ரெஹனா
என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன
தீப்பிழம்புகள்கொண்ட வானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது
மழை சிணு சிணுக்கும்
மென்மையான இரவின் கீழே
உன்னைப் புதைத்துக்கொள்
தகிப்பும் மழையும்
ஆர்ப்பரிக்கின்ற காடுமுழுக்க
மந்திரித்துவிடப்பட்ட விலங்குகள்
உள் அழைக்கின்ற கண்களால்
பின் வாங்குகின்றன
மழையும் சுவையும்
காற்றின் ஆழ்ந்த பசியும்
சதுப்பு நிலத்தில் உலவுகின்றன
அங்கே
மேயும் கபில நிறக்குதிரை
தொழுவம் அடையும் நேரம்
மஞ்சள் அலரிப்பூக்களை
மடியில் சேர்த்தெடுப்பவள்
எஞ்சிய உன் கண் சிமிட்டலையும்
எடுத்துப்போகிறாள்
வெது வெதுப்பான மழைக்காடாக
உருக்கொள்கின்றன என் கவிதைகள்
