வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலிய பிரச்னைகள் மறையும்.
வெந்தயம், 17 கிராம் எடுத்து, 340 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும். வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம். இதனால் உடல் வெப்பம் நீங்கும்.
வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து, சர்க்கரைப் பாகில் போட்டு லேகியமாகச் செய்து சாப்பிட்டால் சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைக்கனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும். நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும். வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து, பொடி செய்து சோற்றுடன் கலந்துண்டால் வயிற்றுவலி, பொருமல், வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.
மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி, உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டியபின் இறக்கி, சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால், நேரிடும் சிற்சில பிணிகள் தணியும்.
இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி, உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.
வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும். வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி,
மூச்சடைப்பு இவை போகும்.
வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டு கடைந்து உட்கொண்டால் மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளை போக்கும்.
