ஆப்கானிஸ்தானின் உச்சநீதிமன்றத்துக்கு முதல்முறையாக பெண் ஒருவரை நியமிக்கும் முயற்சியை நாட்டின் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்துக்கு அனிசா ரசௌலியை அதிபர் அஷ்ரஃப் கனி நியமித்திருந்தார்.
ஆனால் அவரது நியமனத்துக்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் கோரப்பட்டபோது, மிகக் குறைவான உறுப்பினர்களே அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த ஒரு நீதிபதி பதவிக்கு ஆண் ஒருவரை நியமிக்க நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
நாட்டின் பல உயர் பதவிகளுக்கு பெண்களை நியமிக்க அதிபர் முயற்சித்து வருகிறார்.
தாலிபான்களின் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கோ, வேலைக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் கால் பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமன்றி இரண்டு மாகாணங்களுக்கு பெண்களே ஆளுநர்களாக உள்ளனர்.