நீதித்துறை அரசியல்வாதிகளுக்கு அடிபணியக்கூடாது!
இலங்கையின் நீதித் துறையானது அரசியல்வாதிகளின் கட்டுப் பாட்டுக்குச் செல்லாமல், சுதந்திரமாகச் செயற் படக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் மறு சீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என யாழ். ஆயர் இல்ல இளையோர் ஆணைக் குழு இயக்குநர் வண.பிதா எம்.வி.ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட பிரதேசமாக மாற்றப் படவேண்டும். அதிகாரங்கள் மத்திக்கு மாத்திரம் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான முறைமையொன்று இருக்கவேண்டும். இன ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்கள் விடுவிக்கப்படவேண்டும். தமிழர்களின் தேசியம் காக்கப்பட வேண்டும், அரசாங்கத்துக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இடையில் மேற் கொள்ளப்படுகின்றன எந்த ஒப்பந்தமும் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
