ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற முனைந்தால்- மஹிந்த அணி எச்சரிக்கை
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - இலங்கை அரசின் இணை அனுசரணையுடனேயே கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக இருந்தால் தற்போது அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை அரசு நிராகரிக்காது செயற்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். இந்த விடயத்தில் அரசு விளையாட்டுத்தனமானக் கருத்துகளைக் கூறி நாட்டு மக்களை மடையர்களாக்கி சாதிக்க நினைக்கின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இதில் அரசு தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும்" - என்றார்.
