சிரியாவில் பாரம்பரியம் மிக்க பழம்பெரும் நகரான பல்மைராவின் பழங்காலச் சிதிலங்களிலுள்ள சிலைகள் என்று கூறப்படுபவைகளை ஆயுததாரிகள் உடைப்பதாகக் காட்டும் படங்களை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் குழு வெளியிட்டுள்ளது.
அந்தச் சிலைகள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது என்றும் பின்னர் அவை அழிக்கப்பட்டன என்றும் அந்தக் குழு கூறுகிறது.
கடந்த மே மாதம் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றான பல்மைராவை ஐ எஸ் குழு கைப்பற்றியதிலிருந்தே அதன் பொக்கிஷங்கள் அழிக்கப்படக் கூடும் எனக் கவலைகள் எழுந்திருந்தன.
உருவங்களைக் கொண்ட கலைப்பொருட்கள் என அவர்கள் கருதும் அருங்கலைப் பொருட்களை வேறு பல இடங்களிலும் அவர்கள் அழித்துள்ளனர்.
விற்பனை
முன்னதாக ஐ எஸ் குழு அங்கிருந்து பழங்காலப் பொருட்களை சூறையாடி அவற்றை கடத்தல்காரர்களுக்கு விற்கின்றனர் என்று ஐ நாவின் கலாச்சாரன அமைப்பான யுனெஸ்கோ நம்பியதாக தெரிவித்திருந்தது.
இஸ்லாமிய அரசு ஜிகாதிகளால், இராக் மற்றும் சிரியாவில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டு, கடத்தல் காரர்களிடம் விற்கப்பட்ட தொல்பொருட்களில் சில, பிரிட்டனில் இருக்கும் தொல்பொருள் சேகரிப்பாளர்களிடம் வந்தடைவதாக யுனெஸ்கோவின் இயக்குனர் இரெனா பொக்கோவா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அரிய பொருட்களை கொள்ளையடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய தொழிலாகவே நடப்பதாகவும், இஸ்லாமிய அரசு அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் நிதியானது சட்டவிரோத தொல்பொருள் வர்த்தகம் மூலமாகவே கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றும் பொக்கோவா கூறினார்.
கலாச்சார பாரம்பரியத்திற்கு எதிரான தாக்குதல்களின் அளவை விளங்கப்படுத்தவும், தொல்பொருட்கள் கடத்தல்களை எதிர்க்க சர்வதேச நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்துவதற்காகவும் பொக்கோவா அம்மையார் லண்டன் வருகை தந்திருக்கிறார்
