தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த இடமளியோம் : ஜனாதிபதி உறுதி
மீண்டும் ஒரு போர் ஏற்பட இடமளிக்கக் கூடாது. வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசின் கடப்பாடாகும். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோ, தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதோ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் .
12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளவர்களை விடுவிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகின்றது என்பதை சகலரும் மனசாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையை ஆரம்பித்தார்.
வடக்கு, கிழக்கில் பெளதீக அபிவிருத்திகளை மேற்கொள்வதன் மூலம் அங்குள்ள மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பது கடந்த ஆறு மாதங்களில் எமக்குத் தெளிவாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் நாடாளுமன்றம், அரசியல் மேடைகள் மற்றும் ஊடகங்கள் என பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது.
எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் பற்றி கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியின் பின்னர் போருக்குப் பின்னரான நிலைமையொன்றுக்கு நாடு முகங்கொடுத்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இதனை நிறைவேற்றும் பொறுப்பு எமது அரசாங்கத்தின் கைகளுக்கு வந்தது.
போரின் பின்னரான காலப்பகுதியில் கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னைய அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தன.
வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்ற பெயர்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோது பெளதீக அபிவிருத்திகள் மூலம் அங்குள்ள மக்கள் திருப்தியடையவில்லை.
அவர்களின் உளரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இதுவே எம்முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும்.
போருக்குப் பின்னரான நாடு என்ற ரீதியில் தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தவேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் என்னை ஜனாதிபதியாக்குவதற்காக வாக்களித்தனர்.
சுதந்திரம்இ மனித உரிமை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம். இவ்வாறான பின்னணியிலேயே 19ஆவது திருத்தச்சட்டத்தை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம்.
அது மாத்திரமன்றி ஜனாதிபதியின் கீழ் தேசிய நல்லிணக்கம் தொடர்பான அமைச்சை உருவாக்கிஇ அதுதொடர்பான செயலணியின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நியமித்திருந்தோம்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பு மற்றும் சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதம் அவசியமானது. இன்றைய சந்ததியினருக்கும், நாளை பிறக்கப்போகவிரு க்கும் குழந்தைகளுக்கும் சுதந்திரமான நாட்டை கையளிப்பதற்காகவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
நாட்டில் மீண்டும் போர் ஏற்படாத சூழலை உறுதிப்படுத்துவதற்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும். வங்குரோத்து நிலையில் உள்ள அரசியல்வாதிகள் இறுதி நேரத்தில் கையாளும் ஆயுதம் தேசப்பற்று என இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு கூறியுள்ளார்.
இதேபோன்றே இலங்கையில் உள்ள இனவாதம் பிடித்தவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பெளத்த சிங்கள மக்கள் மனங்களில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்த வேண்டாம் என நான் இனவாதத்துடன் செயற்படுபவர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் போர் ஏற்படாத சூழலை ஏற்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.
பெளதீக அபிவிருத்திகளால் மாத்திரம் அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. முன்னாள் புலிகளின் முக்கியஸ்தரான கருணா அம்மான், பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், சுதந்திரக் கட்சியின் உபதலைவராக மகிந்த காலத்தில் நியமிக்கப்பட்டார். அது மாத்திரமன்றி பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரானார்.
புலிகளுக்காக சர்வதேச ரீதியில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட கே.பி சுதந்திரமாக இருக்கின்றார். இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக செயற்படுவது பிழையல்ல. எதிர்காலத்தை நோக்கில் கொண்டு நடவடிக்கை எடுப்பது பிழையல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.
மகிந்த அரசாங்கத்தில் 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளை விடுவிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது.
கடந்த அரசாங்கத்தால் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளுக்கு அமைய தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்களின் தடைகளை நீக்கியுள்ளோம். எமது அரசாங்கத்துக்கு புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமையவே அவர்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
