தேசிய நீர்வழங்கல் சபையின் தலைவர் நீதிமன்றில் ஆஜர்!
சுன்னாகம் நிலத்தடிநீர் மாசடைதல் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசிய நீர்வழங்கல் சபையின் தலைவர், நேற்று சட்டத்தரணி மூலம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜரானார்.
இதன்போது நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறினால் நீங்கள் ஆஜராகமாட்டீர்களா? என நீதவான் ஏ.யூட்சன் கடுமையாக எச்சரித்தார். நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னால் சமர்பிப்பதில்லை. நீதிமன்றினை அவமதிப்பு செய்கிறீர்களா? என வினவினார். இதற்கு தேசிய நீர்வழங்கல் சபையின் தலைவர், தனக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், நேற்று 18 பத்திரிகையில் வெளியான செய்தியினைப் பார்த்தே அறிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
இதன்போது வழக்கினை விசாரித்த நீதவான் அடுத்த வழக்குத் தவணையான ஏப்ரல் 08ஆம் திகதி கண்டிப்பாக மன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். சுன்னாகம் மின்சார சபை வளாகத்தில் வெறுமனவே நிலத்தில் விடப்பட்ட கழிவு ஒயிலால் அப்பிரதேச கிணறுகளுக்கு கழிவு ஒயில் பரவியமைக்காக தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய பிரதேசங்களின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் தொடக்கப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
இதன்போது மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டும் ஆஜராகாத தேசிய நீர்வழங்கல் சபையின் தலைவருக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
