கூட்டமைப்பின் ஆதரவுடன் வியாழனன்று வாக்கெடுப்பு
அரசியலமைப்புப் பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான யோசனை குறித்த வாக்கெடுப்பு, இம்மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறும் என்று, நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் நீல் இத்தவல கூறினார். இந்நிலையில், இந்தப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு ஆதரவாக வாக்களிப்பதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதென அக்கட்சி அறிவித்துள்ளது.
அரசியலமைப்புப் பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான யோசனை, கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதியன்று, அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கடுத்த தினங்களில் இது தொடர்பான வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அம்மாதம் 23ஆம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பது தொடர்பான வாக்கெடுப்பை 24ஆம் திகதி நடத்தாமல், பிறிதொரு நாளில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இந்த வாக்கெடுப்புப் பிற்போடப்பட்டது.
அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு இணக்கம் தெரிவித்து வாக்களிப்பதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற, கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
